Friday, May 8, 2009

பெரியார் திராவிடர் கழகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு தோழர் மதிமாறனின் கண்டணம்!!!

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள்

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவம், இலங்கைக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ராணுவ லாறிகளை வழி மறித்து, மறியல் செய்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலார் அண்ணன் ராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலை கண்டித்து மத்தியஅரசு அலுவலகங்களுக்கு பூட்டு, பாஸ்போர்ட் அலுவகம் மீதான தாக்குதல், ராணுவ லாறி மறியல் என்று பல புரட்சிகரப் போராட்டங்களை நடத்துகிற, ஈழத்தமிழர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிற அண்ணன் கு. ராமகிருட்டிணனுக்கும், பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கும் நமது வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“நான் வெற்றிப் பெற்றால் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனிஈழம் அமைப்பேன்” என்று சவடால் விடும் ‘ஈழத்தாய்’ ராணுவ லாறிகளில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு, கொச்சின் வழியாக இலங்கைக்கு சென்றதாக வந்த செய்திகளை இன்று வரை மறுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை.

(‘ஈழத்தாய்’ டைட்டில் ரொம்ப நல்லா இருக்கு. ‘புரட்சி’த் தலைவரோடு ஜோடியாக நடித்த ஒரு படத்துக்கு பெயர் ‘கன்னித்தாய்’ அந்த டைட்டில் ரொம்ப பொறுத்தமா இருக்கு. ஆனால் ‘ஈழத்தாய்’ பட்டமோ தேர்தல் நேரத்திற்கு ஏற்றாற் போல் ரொம்ப கேச்சிங்கா இருக்கு.)

‘அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்’ என்ற காரணத்திற்காகவும் திமுகவினராலும், காவல் துறையினாராலும் கடுமையான ஒடுக்குமுறைககு உள்ளாகிறார்கள் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள். பல நிர்வாகிகள் விரட்டி விரட்டி கைது செய்யப்படுகிறார்கள்.

திமுக அரசின் இந்த அடக்குமுறையை எதிர்த்து, ‘ஈழத்தாய்’ இன்று வரை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. (அவருக்கு அந்த மல்டி நேஷன் – ஹெய்டெக் சாமியார் ரவிசங்கர் வந்து இன்னும் ஆலோசனை சொல்லவில்லை போலும். அந்தப் பார்ப்பன சாமியார் பெரியார் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாக எப்படி ஆலோசனை சொல்வார்? அது சரி, இவ்வளவு தலைவர்கள் இருககும் போது, மைலப்பூர் ரவிசங்கர் சுவாமிகள் ‘ஈழத்தாயிடம்‘ மட்டும் அந்த ஈழப்பிரச்சினைக்குறித்த சிடியை தருவானேன்?)

தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கொலை வெறித் தாக்குதலை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூட வக்கற்ற ஈழத்தாய்தான், “தனிஈழம் அமைய தான் வெற்றி பெற்றால் ராணுவத்தை அனுப்புவேன்” என்கிறார்.

_mg_83701

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கைது செய்யப்பட்டபோது

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சமூக விரோதிகள் பெரியார் சிலையை சேதப்படுத்தியபோது – சென்னை மேற்கு மாம்பலம் ராமர் மடம், ஆத்தூர் ராமர் கோயில், சேலம், ஈரோடு என்று பல இடங்களில் மிக சிறந்த முறையில் எதிர்வினை ஆற்றினார்கள் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள். அப்போது பெரியார் திராவிடர் கழத்தை கண்டித்து, மேற்கு மாம்பலத்திற்கு ஆதரவாக அறிக்கை விட்டவர்தான் ஈழத்தாய்.

இந்த மனநிலை கொண்ட ஈழத்தாயிற்கு பெரியார் திராவிடர் கழத்தின் மீது நடக்கும் வன்முறைகளும் கைதுகளும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். இதில் ‘ஈழத்தாய்-பிராமணர் சங்கம்-ஜெயேந்திரன்-ரவிசங்கர்’ இவர்கள் எல்லோரும் திமுகு-பெதிக மோதல் குறித்து இப்படிக் கூட கருதலாம் ‘ஒரே கல்லுல ரெண்டு மாங்கா’

ஆகவே தோழர்களே, பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்தப் போராட்டத்தில் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மீது நடக்கும் இந்த ஒடுககுமுறைக்கு எதிராக முற்போக்காளர்கள் குரல் கொடுக்க வேண்டியது கடமை. ஈழ விடுதலை ஆதரவாளர்கள், முற்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து அரசின் இந்த அடக்குமுறையை அம்பலப்படுத்துவோம்.

1 comment:

  1. தமிழ் திரட்டி

    www.periyarl.com - பகலவன் திரட்டி



    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    ReplyDelete